25.2.10

செட்டிநாட்டு வீடுகள் - பாகம் 2 - Chettinad Houses part 2

செட்டிநாட்டு வீடுகளை பற்றி போன பதிவில் கூறியிருந்தேன்..  இன்றும் செட்டிநாட்டு வீடுகளைப் பற்றிப் பார்க்கலாம்.  இந்த வீடுகளின் சுவர்கள் முழுவதும் சிறப்பான கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது.  இந்த கலவை முட்டை ஓடுகள், எலுமிச்சை சாறு, வாசனை பொருட்கள் போன்ற பலவற்றை கொண்டு செய்யப்படுகிறது.  இந்த கலவை கொண்டு சுவர்கள் பூசப்படுவதால் வீடு வெயில் காலங்களில் கூட குளிர்ச்சியாக இருக்கும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டிக்கு ஒப்புமைப் படுத்தலாம். இந்த கலவையைப் பயன்படுத்துவதால் சுவர்கள் பொலிவுடன் விளங்குவதோடு சுத்தப்படுத்துவதற்கு எளிதாகவும் இருக்கிறது.  இந்த வீடுகள் மிக உயரமாகவும் , காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இந்த வீடுகளின் தரைகள் சிமெண்டால் பூசப்பட்டு பின்னர் வண்ணமாக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் தரைகள் ஆத்தங்குடி கற்களால் கட்டப்பட்டவை.


இந்த வீடுகளின் நடுவில் இருக்கும் வெட்டவெளியான இடம் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையும் வழங்குகிறது. இந்த இடம் மூலம் மழை நீரை சேமிக்கலாம்.  அதாவது மழை பெய்யும் போது தண்ணீர் இந்த இடத்தில் விழுந்து கொடுக்கப்பட்டிருக்கும் வழியே சென்று சேமிக்கப்படுகிறது.  இந்த வழியை மழை பெய்யாத காலங்களில் அடைக்க அதெற்கென்று செதுக்கப்பட்ட கல் உபயோகப்படுத்தப்படுகிறது. பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் பெல்ஜியம் கண்ணாடிகளால் ஆனவை. 


வீடுகளைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொண்டீர்கள்.. இப்போது இங்கு இருக்கும் மேலும் பல விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். அப்படி என்ன இந்த வீடுகளுக்குள் இருக்கும்?  அரிய மரச்சாமான்கள், பித்தளைச் சாமான்கள், ஓலைகளால் ஆன கலைப் பொருட்கள் போன்றவை இருக்கும்.. அதற்கும் மேலாக செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு கை பிடிக்கலாம்.  உணவு வகைகளை பற்றி குறிப்பிடும் போது நொருக்குத் தீனிகளைப் பற்றியும் சொல்ல வேண்டும்.. செட்டிநாட்டுக்கு என்றே நொருக்குத்தீனிகள் இருக்கின்றன, உதாரணமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன். உக்காரை , கந்தரப்பம், கருப்பட்டி பணியாரம், வெள்ளைப் பணியாரம் , கவுனியரிசி , பால் பணியாரம் , தேன்குழல் , சீப்பு சீடை, மனகோலம் போன்ற என்னற்றவை இங்கு பிரபலம். சிலவற்றை நாம் அறிந்திருக்கக்கூட முடியாது. இந்த உணவு வகைகள் அனைத்தும் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சாப்பிடத் தூண்டுபவை.  


பனை ஓலைகளைக் கொண்டு பல வடிவங்களில் பெட்டிகளை கையால் செய்து உபயோகப்படுத்துகின்றனர்.  இந்த பெட்டிகள் பல வண்ணங்களில் பல வடிவங்களை இருக்கின்றன. ஒய்வு நேரங்களில் இவர்கள் செய்த எம்ப்ராயடரி இன்று வீடுகளில் காட்சிப் பொருட்களாக விளங்குகிறது.  எம்ப்ராயடரி என்றால் தற்போது உள்ளது போல அல்ல! வெறும் x வடிவத்தில் துணி முழுவதையும் வண்ண நூல்களால் நிறப்பி உருவாக்கியுள்ளனர். பித்தளைப் பாத்திரங்கள் எல்லாம் பெரிது பெரிதாய் நிற்கின்றன் இந்த வீடுகளில்.. மரச் சாமாண்கள் கலை நயத்தோடு சிறிதும்  பெரிதுமாக இருக்கின்றன. அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. முன்னாட்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் திருவிழா போல் ஒரு வாரம் நடைபெற்றன என்று கூறுவர், ஆனால் இப்போது வெறும் மூன்று நாட்களே நடைபெறுகின்றன. கீழுள்ள வீடியோவைப் பார்த்து செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.




வீடுகள் என்று தலைப்பில் கூறிவிட்டு இதை எல்லாம் எதற்கு கூறுகிறேன் எனக் கேட்கலாம்.. இவை அனைத்தும் இந்த வீடுகளின் பாரம்பரியத்தையும் கலைநயத்தையும் கூற இந்த வீடுகளில் இருப்பவை. என்னைக் கேட்டால் செட்டிநாட்டு மக்கள் இவற்றைப் பாதுகாக்கவும் அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்கவும் மறந்துவிட்டார்கள்.. ஆனால் உணவுப் பொருட்கள் மட்டும் இன்றுவரை நடைமுறையில் உள்ளன.


இந்த வீடுகளில் சில வீடுகள் மற்றுமே சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.  நீங்கள் மற்ற வீடுகளை காண வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும்.  மேலும் சிலவற்றை சுற்றுலாத் தளமாக ஆக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


சுற்றுலாத் தளமாக்கப்பட்ட சில வீடுகள்:
1)S.A.R Muthiah house.
2)Muthiah chettiar, raja of chettinad - kanadukathan.
3)Muthiah's brother house - kanadukathan.


மீண்டும் உங்களுக்காக இங்கு எப்படி செல்வது?
குறிப்பு : இந்த வீடுகள் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானடுகாத்தான், பள்ளத்தூர், ஆத்தங்குடி, சிவகங்கை, நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் அமைந்துள்ளது. குறிப்பாக இந்த இடம் என கூறமுடியாது. இந்த ஊர்களுக்கு சென்றால் நிச்சயம் செட்டிநாட்டின் வீடுகளை காணலாம்.


1)சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கையில் ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து மற்ற இடங்களுக்கு பேருந்துகளில் செல்லலாம்.


3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 90 கி.மீ தொலைவில்.




போன பதிவில் நமது நண்பர் டெக் ஷங்கர் பின்னூட்டத்தில் செட்டிநாட்டு வீடுகளின் புகைப்படத் தொகுப்பை அனுப்பியிருந்தார். அவை உங்கள் பார்வைக்காக



இங்கு செல்ல முடியவில்லை என்றால் சென்னையில் ECR ரோட்டில் முத்துக்காடு அருகில் இருக்கும் தக்ஸின் சித்ரா எனும் இடத்துக்கு சென்று வாருங்கள்,  செட்டிநாட்டு வீடுகளைப் போல் இங்கும் ஒரு வீடு இருக்கிறது.



.

3 comments:

எம்.எம்.அப்துல்லா said...

எங்கள் வீடும் செட்டிநாட்டு வீடுதான்.எங்கள் வீட்டு திண்ணை அளவுகூட கிடையாது சென்னையில் நான் இருக்கும் ஃபிளாட்.

Unknown said...

நல்ல பதிவு நண்பரே.வார்த்தைகளால் விவரிக்க இயலாது.நேரில் பார்த்தால் தான் அனுபவிக்க இயலும்.காரைக்குடியில் கல்வி கற்றதால் காண வாய்ப்பு கிடைத்தது. நன்றி

Anonymous said...

nanrakha.ullathu.o.k

Post a Comment

நிறைகளும் குறைகளும் இங்கே!!

Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator