2.10.10

சிதம்பரம் நடராஜர் கோவில் - Chidambaram Nataraja Temple

சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூதஸ்தலங்களுள் ஒன்று. இந்தக் கோவில் ஆகாயத்தை குறிக்கிறது. மொத்தக் கோவிலும் சிதம்பரத்தில் இருக்கும் தீட்சிதர்களால் நிருவகிக்கப்பட்டுவந்து தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் சிதம்பரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. 


இந்தக் கோவிலில் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது. 
இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறலாம். 


சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தளம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.  108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே. 


மேலும் சிவன் நடனமாடிய ஐந்து இடங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் கனகசபை என்றழைக்கப்படும். 


 1) சிதம்பரம் - கனகசபை
 2) திருவாலங்காடு - இரத்தினசபை
 3) மதுரை - வெள்ளிசபை
 4) திருநெல்வேலி - தாமிரசபை
 5) திருக்குற்றாலம் - சித்திரசபை.


இதுமட்டுமல்லாது, சிதம்பரம் கோவிலிலேயே நடராஜப் பெருமானுக்கு ஐந்து சபைகள் உள்ளன.


சிற்சபை - இது சிற்றம்பலம் என்றும் அழைக்கப்படும். முதல் பராந்தக சோழன் இந்த சபைக்கு பொன்னால் ஆன கூறை வேய்ந்தாதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.


கனகசபை - இது பொன்னம்பலம் என்று அழைக்கப்படுகிறது.  இங்கு உள்ள ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது.  இந்தச் சபைக்கு முதலாம் ஆதித்த சோழன் பொன்னால் ஆன கூறை வேய்ந்ததாக கூறுவர்.


ராஜசபை - இது ஒரு ஆயிரம் கால் மண்டபம். ஆனி மற்றும் மார்கழி மாத திருவிழாக்களில் இங்கு நடராஜர் காட்சியளிப்பது உண்டு.


தேவசபை - இது பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது.  இதன் கூறை செம்பினால் வேயப்பட்டது. இதனுள் பஞ்ச மூர்த்திகள் எனப்படும் விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.


நிருத்தசபை  - இந்த சபை கொடிமரத்துக்கு தென்புரத்தில் உள்ளது. இங்கு சிவன் காளியுடன் நடனமாடினார்.


இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லாமல் வேறு உருவமுடையவராக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒரு பாவம் என்று சொல்லலாம். இங்கு அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு. பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் மத்தளத்தை ஏந்தி, ஒரு வட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர்.


கோவிலுக்கு செல்ல மொத்தம் ஒன்பது வழிகள் உள்ளன, அவற்றில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரம் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கோபுரங்கள் 160 அடி உயரம் கொண்டவை. இதில் கிழக்கு கோபுரத்தில் பரதநாட்டியத்தில் குறிப்பிடப்படும் 108 வகையான தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதில் என்ன சிறப்பு என்றால் ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு மன்னனால் கட்டப்பட்டது. தெற்கு கோபுரம் பாண்டிய மன்னனாலும், மேற்கு கோபுரம் கிருஷ்ணதேவராயராலும், கிழக்கு கோபுரம் பல்லவன் இரண்டாம் கோப்பெருசிங்கனாலும், வடக்கு கோபுரம் முதலாம் சுந்தர பாண்டியனாலும் கட்டப்பட்டாதாகவும் வரலாற்றுச் சின்னங்கள் தெரியப்படுத்துகின்றன. 


மேலும் மேற்குக் கோபுரம் வழியாக திருநாவுக்கரசர், தெற்குக் கோபுரம் வழியாக திருஞானசம்பந்தர், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரர், கிழக்குக் கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் வந்து சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. இவர்கள் இந்தக் கோவிலின் உள்நுழைந்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கோபுரத்திலும் அக்கோபுரத்தின் வழியாக வந்தவரின் படத்தைக் காணலாம். 


மற்ற கோவில்களைப் போலவே அறுபத்துமூவர், விநாயகர், முருகன் சந்நிதிகளும் உள்ளன. பதஞ்சலி முனிவரும், வியாக்ய பாரதரும் வழிபட்ட சிவலிங்கம் - திருஆதிமூலநாதரும், உமையம்மையும் உள்ளனர். இங்கு இருக்கும் விநாயகர் சங்கு ஊதுவதை போல காட்சியளிக்கிறார். கோவிலின் உள்ளே சிவகங்கை எனும் பெயரில் பெரிய குளமும், சிற்சபைக்கு அருகில் பரமாநந்த கூபம் எனும் பெயரில் கேணியும் உள்ளன. இந்த சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியதால் 500 ஆம் ஆண்டு இங்கு வந்த ஹிரண்ய சக்கரவர்த்திக்கு தொழுநோய் குணமானதாகவும் வரலாறு உண்டு.  500ஆம் ஆண்டுக்குப் பின்னரே பல மன்னர்களால் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று வரலாறுகள் கூறுகின்றன.


எல்லாவற்றிற்கும் மேல் சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். 


திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர்.


இந்தக் கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், பஞ்சபூதஸ்தலங்களுள் காளஹஸ்தி, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. மற்ற இரண்டு தலங்களான திருவண்ணாமலையும், திருவானைக்காவலும் இந்த நேர்கோட்டில் இருந்து சற்றே விலகியுள்ளன. 


தினமும் நடராஜருக்கு ஆறு பூஜைகள் நடப்பதை குறிக்கும் வகையில் வருடத்தில் ஆறு விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.  


1)முதல் பூஜையை குறிக்கும் வகையில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனமும்


2)இரண்டாம் பூஜையை குறிக்கும் வகையில் மாசி மாதம் சதுர்த்தசியிலும்,


3)மூன்றாம் பூஜையை குறிக்கும் வகையில் சித்திரை மாதம் திருவோணத்திலும்


4)நான்காம் பூஜையை குறிக்கும் வகையில் ஆனி மாதம் உத்திரத்தில் ஆனி திருமஞ்சனமும்,


5)ஐந்தாம் பூஜையை குறிக்கும் வகையில் ஆவணி மாதம் சதுர்த்தசியிலும்.


6)ஆறாம் பூஜையை குறிக்கும் வ்கையில் புரட்டாசி மாதம் சதுர்த்தசியிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.



கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 6 மணி முதல் பகல் 12 மணி மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையும்.


எப்படி செல்வது?
1)சிதம்பரத்திற்கு கடலூர், சென்னை, மயிலாடுதுறை போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.


2)சிதம்பரத்தில் ரயில் நிலையமும் உண்டு. சிதம்பரத்திற்கு செல்லும் சில ரயில்கள் 6701, 6702, 2794, 6175, 6854, 6853.


3)சிதம்பரத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 195 கி.மீ தொலைவில். 

4 comments:

NAGA INTHU said...

எல்லா விவரமும் சொன்னதை போல் சிதம்பரம் கோயிலுக்கும் தீட்சிதர் களுக்கும் உள்ள வரலாற்று பின்புலத்தையும் விரிவாக சொல்ல வில்லையே?. மற்றபடி உன் முயற்சி பெரிய சாதனை தான். வாழ்த்துக்கள்!
அரவரசன்.

Anonymous said...

super da

Unknown said...

சிதம்பரம் தெற்கு வாசல் வழியாக திருஞானசம்பந்தர் சென்று வழிபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தீ வளர்த்து உட்ப்குந்து அந்தணராக வெளியே வந்தால், கோவிலுக்குள் செல்லலாம் என்றுகூறி, நந்தனார் எரியூட்டப்பட இடம் தெற்கு வாசல்தானே ? அதனால்தானே அவ்வாசல் இன்றளவும் மூடப்பட்டிருகின்றது. தெற்கு வாசலைத் திறக்கப் பல தொடர் போராட்டங்களூம் நடந்து வருகின்றனவே ! விளக்கம் தேவை

muthukumar mk said...

good attempt!hats off

Post a Comment

நிறைகளும் குறைகளும் இங்கே!!

Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator