14.10.10

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் - Thiruvaanaikaaval Jambukeswarar temple.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டத்தில் புகழ் மிக்க ஸ்ரீரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்று. பஞ்சபூதங்களுள் ஒன்றான நீருக்கு புகழ் பெற்றது இந்தத் தலம். 

இங்கு உள்ள சிவபெருமான் ஜம்பு எனும் பெயருடைய நவாப்பழ மரத்தின் கீழ் இருந்ததால் அவர் ஜம்புகேஸ்வரர் என்றும், அவரது துணைவியார் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும், தாயுமானவராலும், சேக்கிழாராலும் பாடல் பெற்ற தலம் இது. 

வரலாறு:
இந்தக் கோவில் கோச்செங்கட் சோழனால் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் பாண்டியர்களாலும் மதுரை நாயக்கர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் நான்கு கோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும் உள்ளன.  

ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரமே ராஜ கோபுரமாகும். இக்கோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டது. நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள கிழக்கு கோபுரம் பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியானால் கட்டப்பட்டது. இந்தக் கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது.  மேலும் நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள மேற்கு கோபுரம் ஆதித்ய தேவனால் கி.பி 1435 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.  

இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன.  25 அடி உயர மதில் சுவர்கள் கொண்ட இந்தக் கோவிலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்கள் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. 

மேலும் இந்தக் கோவிலில் வடமேற்கில் ஆயிரம் கால் மண்டபமும், வடகிழக்கில் நூறு கால் மண்டபமும் அமைந்துள்ளன. வசந்த மண்டபம், சோமாஸ்கந்த மண்டபம், நடராஜ மண்டபம், திருமூர்த்தி மண்டபம் ஆகிய மண்டபங்களையும் இங்கு காணலாம். 

சிறப்பு:

இக்கோவிலின் சிறப்பு, சிவலிங்கம் தரைமட்டத்திற்கு கீழ் உள்ளது, இதனால் எப்போதும் கோவில் கருவறையில் நீர்கசிவு இருந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் கூட நீர் வற்றாமல் கசிந்து கொண்டிருக்கும். இதனால் இங்கு உள்ள சிவலிங்கம் எப்போதும் பாதி நீரில் நனைந்தபடியே இருக்கிறது. 


அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இங்கு உள்ள அம்மனின் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பர்.  முன்னர் அம்பாள் கொடூரமாக இருந்ததால் ஆதிசங்கரர் இக்காதணிகளை அணிவித்து, முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்து உக்கிரத்தை தணித்தார். 


தல புராணம்:
இங்கு உள்ள லிங்கம், ஒரு முறை அம்பிகை பூமிக்கு வந்தபோது காவேரியில் சிறிது நீர் எடுத்து உருவாக்கப்பட்டது. இந்த லிங்கம் காட்டில் நாவல் மரத்தின் அடியில் இருந்தது. சிவகணங்களில் இருவர் சாபம் காரணமாக இந்த காட்டில் யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். அச்சமயம் அந்த சிவலிங்கம் கூரையில்லாததால் வெயில் மற்றும் மழையினால் சேதத்துக்கு உள்ளாக இருந்தது. சிலந்தி சிவனின் மேல் வலை பின்னி காத்தது. அந்த வலையை அழித்து யானை காவிரியில் இருந்து நீரும், பூவும் கொண்டு வழிபட்டது. இதனால் சிலந்தி யானையின் தும்பிக்கையினுள் புகுந்ததால் இரண்டும் செத்து மடிந்தது. 

பின்னர் சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கி சிலந்தியை கோச்செங்கட் சோழனாக ஆக்கினார். கோச்செங்கட் சோழன் சிவனுக்காக கட்டிய 70 மாடக்கோவில்களுள் முதல் மாடக்கோவிலே இந்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்.

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை எழுப்பிய பணியாளர்களுக்கு இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து திருநீறை கூலியாகக் கொடுத்ததாகவும் அது தங்கமாக மாறியதாகவும் வரலாறு உண்டு. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்றும் அழைக்கிறார்கள்.

சிற்பக்கலை:
இங்கு உள்ள மூன்று கால் முனிவர் சிலையும், அகிலாண்டேஸ்வரி சந்நிதிக்கு வெளியே உள்ள ஏகநாதர் சிலையும், நான்கு கால் தூணில் காணப்படும் மங்கையர் சிற்பமும் இக்கோவிலில் உள்ள மிகச்சிறந்த சிற்பங்களாகும். 




விழாக்கள்:
மற்ற கோவில்களைப் போல இக்கோவிலிலும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோவிலின் உச்சிக் கால பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.  உச்சிக் காலத்தில் லிங்கத்துக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. இங்கு உள்ள அர்ச்சகர் பெண் வேடமிட்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்.  மேலும் வருடந்தோறும் பங்குனி பிரமோத்சவம், பஞ்ச பிரகாரம், வசந்த உத்சவம், தைப்பூசம், ஆடிபூரம், பிடாரி அம்மன் திருவிழா போன்ற திருவிழாக்களும் நடைபெறுகின்றன. 



கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை. 



தொடர்புக்கு - 91-0431-2230257





எப்படி செல்வது?


1)திருவானைக்காவலுக்கு திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தில் இருந்து பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

2)அருகில் உள்ள ரயில் நிலையம் - திருச்சி 5 கி.மீ தொலைவில்.

3)அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி (விமான நிலையம் திருச்சி நகரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது)
.

1 comments:

Anonymous said...

எப்படி செல்வது என்ற ரூட் இன்னும் சரியாக குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். இதில் உள்ள தகவல்கள் சரியான வழிகாட்டுதல்களாக இல்லை. விமான நிலையம் ரயில் நிலையம் இரண்டுமே 5 கி.மீ. தொலைவில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ரயில் நிலையம்தான் ஸ்ரீரங்கத்தில் உள்ளது; ஆனால் விமான நிலையம் மிகத்தொலைவில் உள்ளது தெரியுமா.

Post a Comment

நிறைகளும் குறைகளும் இங்கே!!

Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator