25.4.10

ஊட்டி-மலைகளின் அரசி- Ooty - Udhagamandalam. பகுதி - 2



போன பதிவின் தொடர்ச்சி...


Deer Park:
ஊட்டியில் உள்ள ஏரி பூங்கா அருகில் அமைந்துள்ளது இந்த மான் பூங்கா.  இந்தியாவில் மிக உயரத்தில் அமைந்திருக்கும் பல பூங்காக்களில் இந்த பூங்காவும் ஒன்று.  ஊட்டியின் அருமையான வானிலையில் வனவிலங்குகளை காண இந்த பூங்கா பெரிதும் உதவியாய் இருக்கிறது.  1986 ஆம் ஆண்டு மொத்தம் 22 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் 6 ஏக்கர் நிலம் பொதுமக்கள் பார்வைக்காக ஒதுக்கப்பட்டது.  தமிழக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பூங்கா ஊட்டியில் இருக்கும் சில முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.


Boat House:
ஊட்டியின் பிரதான ஏரியில் இந்த படகு இல்லம் அமைந்துள்ளது. ஜான் சுலிவன் என்பவரால் உருவாக்கபட்ட இந்த ஏரி 4 சதுர கி.மீ அளவு கொண்டது. இந்த ஏரிக்கு அருகில் ஊட்டியின் புகழ்மிக்க குதிரை பந்தயம் நடக்கும் இடமான ரேஸ் கோர்ஸும் அமைந்துள்ளது. இரண்டு பேர் செல்லக்கூடிய படகுகள்,  குடும்பத்தோடு செல்ல படகுகள் என பலவகையான படகுகள் இங்கு இருக்கின்றன.  தமிழக சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்ட இந்த படகு இல்லத்தில் படகுகள் மூலம் ஏரியின் அழகையும், இயற்கை வளங்களையும் கண்டு களிக்கலாம்.


Government Museum:
ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம். ஊட்டியில் முன்னர் தோடா இனத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் பயன்படுத்திய பல்வேறு வகையான பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நீலகிரி மாவட்டத்தை பற்றிய செய்திகள்,  நீலகிரி மாவட்டத்திக்கு தொடர்புடைய சிற்பங்கள் மற்றும் மேலும் பல கலைப்பொருட்களும் இங்கு அணிவகுக்கின்றன.  மேலும் ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் லலித் கலா அகாடமியும் அமைந்துள்ளது.  இந்த அகாடமியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலைப்பொருட்களும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.


Railway Station:
நீலகிரி மலை ரயில் unescoவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.  இந்த ரயில் ஊட்டியின் கரடுமுரடான மலைப்பாதையில் கம்பீரத்துடன் செல்கிறது. இந்த ரயிலில் செல்வதன் மூலம் ஊட்டியில் ரம்மியமான வானிலையையும்,  ஊட்டி மலையின் அழகையும் ரசிக்கலாம். கிட்டத்தட்ட 5 மணி நேர பயணம் மூலம் ஊட்டியை அடையலாம்.


மேலும் பார்க்ககூடிய இடங்கள் :  St, Stephen Church, Wax world(பார்க்க - மெலுகால் ஆன காந்தி படம்), கோல்ப் மைதானம்.


எப்படி செல்வது?
1)ஊட்டிக்கு சென்னை, மேட்டுப்பாளயம், பெங்களூரு, மைசூர் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)ஊட்டியில் ரயில் நிலையம் உள்ளது. மேலும் விபரங்கள்(1) மேலும் விபரங்கள்(2)


3)அருகில் உள்ள விமான நிலையம் - கோயம்பத்தூர் 105 கி.மீ தொலைவில்










.

20.4.10

ஊட்டி-மலைகளின் அரசி- Ooty - Udhagamandalam.



ஊட்டி, மலைகளின் அரசி, நீலகிரி மலைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாம் ஊட்டி என்று அழைத்து பழகிவிட்டாலும் ஊட்டிக்கு அரசாங்கம் வைத்த பெயர் உதகமண்டலம்.  கடல் மட்டத்தில் இருந்து 2286 மீ அதாவது 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஊட்டி. நீலகிரி மாவட்டத்தின் தலைநகராகவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் இடமாகவும் ஊட்டி விளங்குகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் ஊட்டி என்ற உதகமண்டலம் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பையோஸ்பியர்(biosphere) நீலகிரி.  நீலகிரி மலைப்பகுதி உலகத்தில் இருக்கும் 14 hotspots களில் மிக முக்கியமான ஒன்று.


உதகம் என்றால் தண்ணீர், மண்டலம் என்றால் வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர்.  எனவே உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளை குறிக்கிறது.  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒட்டெகமண்ட் எனவும் அழைக்கப்பட்டது. அதுவே சுருங்கி ஊட்டி என்றானது.  ஊட்டியில் இருக்கும் சுற்றுலாத் தளங்களைப் பற்றி பார்கலாம்..


Government Botanical Garden,  Ooty:
1847இல் அன்றைய சென்னை மாகானத்தின் கவர்னரால் அடிக்கல் நாட்டப்பட்டு 22 ஏக்கர் பரப்பளவுடன் உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் ஆறு பகுதிகளை கொண்டது.. 
1)கீழ் பகுதியில் உள்ள பூங்கா - Lower Garden
2)புதிய பூங்கா - New Garden
3)இத்தாலிய பூங்கா - Italian Garden
4)பாதுகாக்கப்படும் இடம் - Conservatory
5)தண்ணீர் மாடி - Fountain Terrace
6)சிறிய செடிகளுக்கான பூங்கா - Nurseries


பச்சை பசலேன தோற்றமளிக்கும் இந்த பூங்காவில் அரிய வகையான பேப்பர் மரம், குரங்குகள் ஏற முடியாத மரம் , 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் போன்றவைகளை இங்கு காணலாம்.  இத்தாலிய வகைப் பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள், ஆர்சிட் பூக்கள், பெர்ன் ஹவுஸ் போன்றவைகளை காணலாம். வருடந்தோறும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் இங்கு மே மாதம் மலர்க் கண்காட்சி நடைபெறும்.


Rose Garden:
நூறாவது மலர்க கண்காட்சியின் நினைவாக உருவாக்கப்பட்டது இந்த பூங்கா. மொத்தம் 4 ஏக்கர் பரப்பளவில் ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்னுமிடத்தில் , எல்க் மலையில் இந்த பூங்கா உள்ளது. முதன் முதலில் 1919 வகையான் 17,256 ரோஸ் மலர்கள் நடப்பட்டது. பின்னர் மேலும் பல மல்ர்கள் நடப்பட்டு தற்போது 2241 வகையான 20,000க்கும் மேற்பட்ட மலர்கள் உள்ளது. இங்கு உள்ள நில மாடம் என்னுமிடத்தில் இருந்து மொத்த பூங்காவையும் கண்டுகளிக்கலாம்.  தமிழக தோட்டக்கலைத்துறையால் இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது.  


Lake Park:
ஏரி பூங்கா ஊட்டியின் பிரதான ஏரியில் அமைந்துள்ளது. ஊட்டி ரயில் நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. ஏரியின் ஒரு பகுதி 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பை பெற்று ஊட்டியின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. மாலை நேரங்களில் இயற்கையின் அழகை ரசிக்க உகந்த இடம் இந்த ஏரி பூங்கா.  மேலும் 1978ஆம் ஆண்டு கண்ணாடியால் ஆன பூங்கா ஒன்றும் இங்கு உருவாக்கப்பட்டது. ஏரியை சுற்றி யூகலிப்டஸ் மரங்களும், சிறுவர் பூங்காவும், சிறுவர் ரயிலும் உள்ளது.  


அடுத்த பதிவிலும் ஊட்டி தொடரும்..


.

14.4.10

திருவள்ளுவர் சிலை - Thiruvalluvar Statue

வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  இந்த சித்திரைத் திருநாளில் தமிழை நிலைநாட்டிய , தமிழுக்குப் பெருமை சேர்த்த வள்ளுவரைப் பற்றி இந்த பதிவை எழுதுவதில் நான் பெருமைகொள்கிறேன்.  அந்தப் புலவரை பெருமைப்படுத்த வங்காள விரிகுடாவும், இந்தியப் பெருங்கடலும், அரபிக் கடலும் சங்கமிக்கும் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் சுனாமியையும் தாக்குப்பிடிக்கும் பலத்தோடு எழுப்பப்பட்ட 133 அடி உயர சிலையை உருவாக்கி தனக்கு பெருமை தேடிக்கொண்டார் தமிழக முதல்வர்.


எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க புலவர்களின் வரலாற்றை நமது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தாலும், தமிழுக்கு தன் இரண்டடி குறளால் புகழைத் தேடித்தந்த திருவள்ளுவரின் வரலாற்றை கண்டுபிடிக்கமுடியவில்லை. குத்துமதிப்பாக திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கி.மு 31ஆம் நூற்றாண்டு என கண்டறிந்துள்ளனர். இருந்தாலும் சிலர் கி.பி இரண்டாம் நூற்றாண்டு எனவும் சிலர் கூறுகின்றனர்.  இவர் எழுதிய திருக்குறள் அனைவருக்கும் பொருந்துவதால், இவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்றும் கணிக்கமுடியவில்லை.  அவர் வரலாற்றை அறிய முடியவில்லை என்றாலும் அவரைப் பெருமைப்படுத்ததுவில் பல நாடுகளும் பங்கெடுத்துள்ளன, அதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதியார்


1, ஜனவரி, 2000 அன்று தற்போதைய தமிழக முதல்வர் கலைஞரின் யோசனையால் உருவாகிய திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது. திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில் 133 அடி உயரம் கொண்டது இந்த சிலை.  சிலையைத் தாங்கும் பீடம் மட்டும் 38 அடி, சிலை 95 அடி என மொத்தம் 133 அடி உயரம்.   இந்த 38 அடி உயர பீடம் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், 95 அடி உயர் சிலை பொருட்பால் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிக்கிறது.  அதாவது அறத்தை அடித்தளமாக கொண்டே பொருளும் இன்பமும் அமையவேண்டும் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.


1979 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் மொராஜி தேசாயால் அடிக்கல் நாட்டப்பட்டு பல அரசியல் பிரச்சனைகளால் தடைபட்ட கட்டுமானப் பணி 1990ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டு 5000க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்களால் தமிழகத்தின் மிகச்சிறந்த கணபதி ஸ்தபதியின் மேற்பார்வையில் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு 1999ஆம் நிறைவு பெற்றது. இதற்காக சிறுதாமூர் , பட்டுமலைக்குப்பம், அம்பாசமுத்திரம் போன்ற பகுதியில் உள்ள மலைகளில் இருந்து கற்கள் எடுத்துவரப்பட்டு சிலை உருவாக்கப்பட்டது.  இந்த சிலையின் மொத்த எடை 7000 டன்.  தமிழகத்தைப் பொறுத்தவரை கோயில்கள், சிலைகள் போன்றவறை என்றுமே பெரிதாக, பிரமாண்டமாக உருவாக்கப்படுவது உண்டு. அதைப் போலவே திருவள்ளுவர் சிலையும் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமாரியில் கம்பீரத்துடன் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது. நடுக்கடலில் ஒரு சிறிய தீவில் இந்த சிலை அமைந்துள்ளமையால் இந்த சிலையை அருகில் சென்று காண சுற்றுலாத் துறையின் மூலம் படகுகள் இயக்கப்படுகின்றன. பல நாட்கள் வானிலை மாற்றங்களால் படகு போக்குவரத்து நிறுத்தப்படுவதும் உண்டு. சில நாட்களுக்கு முன் கூட ஊழியர்களின் போரட்டத்தால் நிறுத்தப்பட்டது.


வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே - பாரதிதாசன்


கணபதி ஸ்தபதியின் திறமையாலும் அனுபவத்தாலும் சிலையின் இடுப்பு பகுதியில் உள்ள சிறிய வலைவு மிகச் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது. மேலும் எத்தகைய பூகம்பம் ஏற்பட்டாலும் தாங்கும் வகையில் செதுக்கப்பட்டமையால் சுனாமியின் தாக்கத்தையும் எதிர்த்து இன்று வரை  நிலையாய் இருக்கிறது. இந்த சிலையை நீங்களும் கண்டு களிக்கலாமே.  (சிலையின் பீடம் உயரம் கூட இருக்கமாட்டீர்கள்...)


எப்படி செல்வது?
1)கன்னியாகுமரிக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.
2)கன்னியாகுமரியில் ரயில் நிலையம் உண்டு. மேலும் விபரங்கள்
3)அருகில் உள்ள விமான நிலையம் - திருவனந்தபுரம் 80 கி.மீ தொலைவில்.


அங்கு சென்ற பின் சுற்றுலாத் துறையின் படகுகள் மூலம் சிலைக்குச் செல்லலாம்.


நேரம்: காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை.


.

9.4.10

சுற்றுலா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல!!!

பல பேர் சுற்றுலா என்றால் பொழுதுபோக்கு மட்டுமே என்று தவறாக புரிந்துகொள்கின்றனர்.  ஏன் நீங்கள் கூட அப்படி நினைக்கலாம்.  என்னைப் பொறுத்தவரை சுற்றுலா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, நம் அறிவை ஜாலியாக வளர்த்துக்கொள்ள ஒரு கருவி, நம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச்செல்ல நம் ஒவ்வொருவரின் பங்கு. அதை எப்படி சாத்தியமாக்குவது என்ற கேள்விகளுக்கு விடையே இந்தப் பதிவு.

சுற்றுலா என்றால் மூட்டையை கட்டினோமா! ஊட்டி, கொடைக்கானல் என்று எங்காவது கிளம்பினோமா! விடுமுறையை உல்லாசாமாய் களித்தோமா! என்று மட்டுமே இருக்கும் நாம் அந்த இடத்தின் வரலாற்றை, சிறப்பை, அதிசயத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.  எங்கு தங்கும் விடுதிகள் இருக்கிறது?, எங்கு நல்ல உணவு விடுதி இருக்கிறது?, எந்த இடத்தில் பொழுதைக் களிக்கலாம்?, எப்படி செல்லலாம்? என்றெல்லாம் சுற்றுலா செல்லும் முன்னர் தெரிந்துகொள்ளும் நாம் அந்த இடம் எப்படி உருவானது, யார் அதை உருவாக்கினார்கள், அதில் இருக்கும் அறிவியல் நுணுக்கங்கள் போன்ற பலவற்றை அறிய முற்படுவதில்லை. ஏனெனில் வேலைப் பளுவால் களைத்து போயிருக்கும் நாம், நம்மை உற்சாகப்படுத்திக்கொள்ளவே சுற்றுலா செல்கிறோம், புத்துணர்ச்சி பெறுகிறோம். இந்த நேரத்திலும் நம் மூளைக்கு கொஞ்சம் தீனி போட நாம் விரும்புவதில்லை. சுற்றுலா என்பது சந்தோஷமாய் இருக்க மட்டுமே உருவாக்கப்பட்ட ஒன்றல்ல! பல பேர் இது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினாலும், நிறைய பேர் இது போன்ற தகவல்களை அறிய கொஞ்சமும் விருப்பப்படுவதில்லை. அப்படியாவது அறிவை வளர்க்கலாமே!! என்ற எண்ணம் பல பேருக்கு இருக்காது. ஏன் நீங்களே அறிவை வளர்த்து என்ன செய்யப்போகிறோம் என்று நினைக்கலாம். அதுக்கு நான் ஒன்றும் செய்யமுடியாது. இல்லையெனில் நீங்கள் இதுபோன்ற விஷயங்களை அறிய ஆர்வம் காட்டியிருக்கலாம், ஆனால் உங்களுக்கு நேரம் இருந்திருக்க்காது. இதுவரை நீங்கள் பல தகவல்களை அறிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம், இனிமேலாவது பல தகவல்களை அறிய ஆர்வமாவது காட்டுங்கள், பல தகவல்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. சுற்றுலா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல!!! அறிவை வளர்க்கும் கருவி.

தமிழகத்தைப் பொறுத்தவரை எத்தனையோ சுற்றுலாத் தளங்கள் இருந்தாலும், கோடை விடுமுறையின் போது நாம் அனைவரும் ஊட்டியையும், கொடைக்கானலையும் மட்டுமே நாடுகிறோம்.  எனக்குத் தெரிந்த சிலர் வருடம் தவராமல் ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் செல்வதுண்டு. இப்படி ஒரு குறிப்பிட்ட இடத்தையே நாடுவதால் அந்த இடம் மிகப்பிரபலமான சுற்றுலாத் தளமாகிறது. அப்படி ஆன பின் அங்கு முதலில் ஏற்படுவது ஜனப்பெருக்கம். நிறைய கட்டிடங்கள் உருவாகும், பின்னர் ரியல் எஸ்டேட் சந்தை மிகுந்த லாபம் பார்க்கும். இதனால் ஒரு வகையில் பல பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்பட்டாலும், கூர்ந்து கவனித்தால் அந்த இடம் அதன் தூய்மையையும், உண்மை நிலையையும் இழக்கும்.  அதுதான் தற்போது ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி போன்ற மலைப்பிரதேசங்களில் நடக்கிறது.  முன்னர் கோடை காலங்களிலும் இந்த மலைப்பிரதேசங்களில், மிகவும் குளுமையாக இருக்கும்.  இது போன்ற பல மாற்றங்களால் அங்கு இருந்த மரங்கள் அழிக்கப்பட்டு, கட்டிடங்கள் உருவான காரணத்தால், தற்போது இந்த மலைப்பிரதேசங்களும் சூரியனின் தாக்கத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றன.  இப்படி சுற்றுலா என்ற பெயரில் நாம் இயற்கை அன்னை நமக்களித்த வரங்களை அழித்து நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம். சென்ற இடங்களுக்கே மீண்டும் மீண்டும் செல்லமால் புதிய இடங்களுக்கு நாம் செல்வதன் மூலம் இயற்கை அழிவைத் தடுக்க முடியும். சுற்றுலா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல!!! இயற்கையை அழிக்கும் ஆயுதம்.

சரி! இப்படி பல இடங்களுக்குச் செல்லும் நாம் அந்த இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்கிறோமா? என்றால் அதுவும் இல்லை. சுற்றுலாப் பகுதிகள் மட்டுமல்ல, நம் வீட்டுத் தெருவைக் கூட சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை. வெளிநாட்டுக்குச் சென்றால் மட்டும், இங்க பாரு ரோட்ட எவ்வளவு சுத்தமாக வைச்சிருக்காங்க? என்ற கேள்வியை மட்டும் எழுப்புகிறோம்.  அங்கு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டாலும், மக்களின் ஒத்துழைப்பு இருப்பதால் மட்டுமே நாடு தூய்மையாக இருக்கிறது என்பதை நாம் நினைப்பதில்லை. எவ்வளவு காலம் தான் நாமும் அரசாங்கத்தின் மேலயே குறை கூறிக்கொண்டு இருப்பது. நம் நாட்டு அரசாங்கம் நம் மேல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காததால் நாம் இவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். சுற்றுலாத் தளங்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் என்ன நடக்கப் போகிறது என்று நீங்கள் கேட்கலாம். கேக்கலைன்னா பரவாயில்ல! பதில சொல்லிடறேன்.  சுற்றுலாத் தளங்களை தூய்மையாக வைத்துக்கொள்வதால் நீங்கள் வெளிநாட்டுக்குச் சென்றால் எப்படி அந்நாட்டின் தூய்மையைப் பற்றி புகழ்கிறீர்களோ... அது போல நமது நாட்டுச் சுற்றுலாத் தளங்களைக் காணவரும் வெளிநாட்டவரும் நம் நாட்டை புகழக்கூடும். இதனால் சுற்றுலாத் துறை வளர்சியடையும். 
 
பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறவேண்டும் என்றால் அந்த நாடு தூய்மையாகவும் இருக்க வேண்டும். நமது அரசாங்கம் நாட்டை தூய்மையாக்க ஒன்றும் செய்யவில்லை என்றாலும் நாமாவது ஏதாவது செய்யலாம் அல்லவா? சிறு துளி பெரு வெள்ளம் என்பதை நினைவில் கொண்டு நம் நாட்டின் வளர்ச்சியில் நாமும் பங்கு கொள்ளவேண்டாமா?  சுற்றுலா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல!!! நாட்டை வளர்க்க நமது சிறிய பங்கு.

இப்படி சுற்றுலாவை பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், அறிவை வளர்க்கும் கருவியாக, இயற்கையை அழிக்கும் ஆயுதமாக, நாட்டை வளர்க்க நமது சிறிய பங்காக பார்த்தால் நமக்கும் நன்மை, நாட்டுக்கும் நன்மை என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

ஏதோ! எனக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறேன்.  ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.  மேலும் சுற்றுலா சார்ந்த உங்கள் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள இந்த வலைப்பதிவு உதவும் என்பதையும் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.
.

4.4.10

தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா - Gulf of Mannar Marine National Park

பல உயிரினப் பூங்காக்களுக்கு சென்றிருப்போம்! கடல் வாழ் உயிரினப் பூங்காவுக்களுக்கு என்றாவது சென்றதுண்டா? ஆம் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவில் தமிழக சுற்றுலாத் துறையும் வனத்துறையும் இணைந்து கடல் வாழ் உயிரினப் பூங்காவை உருவாக்கியுள்ளன. அதைப் பற்றி இன்று பார்ப்போம்.  


இந்தியாவின் மிகப் பெரிய கடல் வாழ் உயிரினப் பூங்கா இதுதான். இதுவரை இந்த பூங்காவில் 3600க்கும் மேற்பட்ட கடல் தாவரங்களும், உயிரினங்களும், 117 வகையான பவளப் பாறைகளும் இங்கு இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 560 சதுர கி.மீ பரப்பளவில் இராமேஸ்வரம் முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடாப் பகுதியில் நீண்ட கடற்கரையோரம் இந்த பூங்கா அமைந்துள்ளது. மன்னார் வளைகுடாவின் மொத்தப் பரப்பளவு 10,500 சதுர கி.மீ , அதில் 560 சதுர கி.மீ பரப்பளவை தேசிய கடல் வாழ் உயிரினப் பூங்காவாக செயல்படுகிறது. இந்த பகுதியில் இருக்கும் 125 கிராமங்களில் வசிக்கும் மரைக்காயர் என்னும் பிரிவைச் சேர்ந்த மக்கள் இங்கு இருக்கும் உயிரினங்களை வேட்டையாடுவதையே தொழிலாக கொண்டுள்ளனர். இவர்களால் இந்த பகுதியில் வாழும் பல உயிரினங்கள் அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன என்பது மிகவும் வருத்தமான செய்தி.


இந்த மன்னார் வளைகுடா இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுப் பகுதியில் இந்தியாவின் தென்கிழக்கு முனையும், இலங்கை கடற்கரைக்கும் இடையில் 160 கி.மீ முதல் 200 கி.மீக்கு இடைப்பட்ட இடத்தில் உள்ளது. தமிழகத்தின் தாமிரபரணி ஆறும், இலங்கையின் மல்வத்து ஆறும் இந்த வளைகுடாவில் வந்து சேர்கிறது. 1986 ஆம் ஆண்டு இந்த வளைகுடாப் பகுதியில் இருக்கும் 21 தீவுகளை தேசிய கடல் வாழ் உயிரினப் பூங்காக்காவாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு இந்த பூங்காவும் அதைச் சுற்றியுள்ள 10 கி.மீ பகுதியும் biosphere resereve ஆக அறிவிக்கப்பட்டது.


21 தீவுகளின் பெயர்கள்:
1) வான் 2)கோஸ்வரி 3)விலங்குச்சாலி 4)கரியாச்சாலி 5)உப்புத் தண்ணி 6)புலுவினிச்சாலி 7)நல்ல தண்ணி 8)அனைப்பர் 9)வலி முனை 10)பூவரசன் பட்டி 11)அப்பா 12) தலரி 13)வலை 14)முள்ளி 15)முசல் 16)மனோலி 17)மனோலி புட்டி 18)பூமாரிச்சான 19)புலிவாசல் 20)குருசடை 21)சிங்கலம்


முன்னர் பாண்டியன், புன்னையடி என்ற இரு தீவுகளையும் தூத்தூக்குடியில் துறைமுகம் கட்டுவதற்காக அழித்துவிட்டனர். இல்லையெனில் அதுவும் இந்தப் பூங்காவில் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.


இந்த பூங்கா பலருக்கு ஆராய்ச்சிக் கூடமாகவும் விளங்குகிறது. நாம் இதுவரை நேரில் கண்டிராத பல வகையான உயிரினங்களை இங்கு கண்டு களிக்க முடியும். ecosystem என்று அழைக்கப்படும், உயிரினங்கள் வாழத்தகுந்த பவளப் பாறைகள், கடற்கரைகள், தீவுகள், மாங்குரோவ் வகைக் காடுகள் போன்றவை இந்தப் பூங்காவில் காணப்படுகின்றன். இங்குள்ள தீவுகளுக்குச் செல்ல இங்கு வாழும் மக்களால் சிறிய படகுகள் இயக்கப்படுகின்றன.


இங்கு பல அரிய சிறப்புமிக்க கடல் தாவரங்கள் இங்கு இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் பதினொன்று வகையான கடல் பாசிகளையும் ஒரே இடத்தில் இந்த பூங்காவில் காணமுடியும். வனத்துறையின் கணக்கெடுப்பின் படி 147 வகையான தேவையில்லா செடிகளும் இந்த பூங்காவில் இருக்கிறது.


உயிரினங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. அரிய வகையான கடல் பசுக்கள், டால்பின்கள், கடற்குதிரைகள், பச்சை நிற கடல் ஆமைகள், பவள மீன்கள், சிங்க மீன்கள், ஆலிவ் ரிட்லி போன்ற பல வகை ஆமைகள், ஸீ-அனிமோன் போன்ற நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் பல உயிரினங்கள் இங்கு உள்ளன. இங்கு இருக்கும் கடல் பாசிகளும் தேவையில்லா செடிகளும் கடல் பசு போன்ற உயிரினங்களுக்கு உணவளிக்கிறது. இங்கு இருக்கும் பல ஆமைகள் அழிவை சந்திக்கும் நிலையிலும் மிக அபாயகரமானதாகவும் இருக்கின்றன.


கடல் வாழ் உயிரினப் பூங்காவான இந்த பூங்காவில் இடம்பெயரும் பறவைகளையும் காணலாம். சிலிகா ஏரி, காலிமோர் மற்றும் இலங்கையிலிருந்து இடம்பெயரும் பல பறவைகளுக்கு இந்த பூங்கா சில நாட்கள் தங்குமிடமாகவும் பயன்படுகிறது. இப்படி இடம்பெயரும் பறவைகள் மட்டும் 180க்கும் மேற்பட்டவை. பல பறவைகள் தங்கள் இனப் பெருக்கத்திற்காகவும் இங்கு வருகின்றன.


இங்கு இருக்கும் மாங்குரோவ் வகைக் காடுகளில் இருக்கும் தாவரங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. அனைத்து தீவுகளில் மாங்குரோவ் வகைக் காடுகள் காணப்பட்டாலும், மனோலி தீவில் இருக்கும் காடுகளில் மற்ற காடுகளைக் காட்டிலும் அதிக அளவிலான தாவரங்கள் இருப்பது சிறப்பு. இங்கு வீசும் பலமான காற்றால் மரங்கள் அதிகம் வளர்வதில்லை, இருந்தாலும் மரங்கள் நல்ல நலத்தோடும், உறுதியானாதாகவும் இருக்கின்றன. இந்த மாங்குரோவ் காடுகள் முழுவதும் pneumatophores என்னும் மரங்களின் வேர்களால் சூழப்பட்டிருக்கின்றன. இந்த காடுகளில் திசம்பர் - ஜனவரி மாதங்களில் பூக்கள் பூத்துக் குழுங்கும்.


இங்கு இருக்கும் பாறைகளின் மதிப்புகளை அறிந்துகொண்டு பலர் இந்தப் பாறைகளை உடைத்துச் சென்றதால் பல பாறைகள் இன்று இல்லை. தமிழக வனத்துறையின் முயற்சியால் இப்போது பாறைகளை உடைப்பது முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் தற்போது நாள் ஒன்றுக்கு 250 மீ3 பாறைகள் இந்த வளைகுடாப் பகுதியில் இருந்து இயற்கைக்கு எதிராக செயல்படும் சிலரால் அகற்றப்படுகிறது. இயற்கை நமக்களித்த வரங்களை
 பாதுகாப்பது நமது கடமை, அதை விட்டுவிட்டு பல இயற்கை வளங்களை நாம் அழித்துக் கொண்டிருக்கும். இப்படி அழிக்கும் நாம் ஒரு நாள் இயற்கையின் ஆற்றலால், பேரழிவுகளால் அழியப்போகிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


மாணவர்களுக்கும், உயிரியல் ஆராய்ச்சியாளர்களுக்கும், இயற்கையை ரசிப்பவர்களுக்கும், மாங்குரோவ் காடுகளின் அழகை அனுபவிக்க ஆசைப்படுபவர்களுக்கும், வியக்கவைக்கும் கடல் உயிரினங்களை காணத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த மன்னார் வளைகுடாவின் தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா ஒரு சிறந்த இடமாகும்.


எப்படி செல்வது?


மன்னார் வளைகுடா இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு சென்று படகுகள் மூலம் மன்னார் வளைகுடாவை அடையலாம்.


1)மண்டபத்திற்கு இராமநாதபுரம், இராமேஸ்வரம், மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இருக்கின்றன.


2)அருகில் உள்ள ரயில் நிலையம் - மண்டபம், தூத்துக்குடி.


3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை


உகந்த நேரம் - அக்டோபர் முதல் ஜனவரி வரை.





.

1.4.10

திருச்சி மலைக் கோட்டை - Rock fort,Trichy


திருச்சி மலைக் கோட்டை , திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகவே விளங்குகிறது. ஒரு மலையைச் சுற்றி கோட்டை அமைந்துள்ளதால் மலைக் கோட்டை என்று அழைக்கப்படும் இது காவிரி ஆற்றின் தென்கரையோரம் அழகிய தோற்றத்துடன் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. திருச்சி பல இடங்களில் இருந்து இந்தக் கோட்டையின் அழகை கண்டுகளிக்கலாம்.


இந்த மலையில் மொத்தம் மூன்று கோவில்கள் உள்ளன. மலையின் கீழே ஒரு கோவில், நடுவே ஒரு கோவில், உச்சியில் ஒரு கோவில் என மூன்று பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் கோவில், நடுவில் தாயுமானவர் கோவில், மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவில் என்பதே அந்த மூன்று கோவில்களாகும். பல்லவர்கள் காலத்தில் தான் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டது, இங்கு உள்ள கோட்டை நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இந்த மூன்றைத் தவிர பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடவரை கோவிலும், பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட குடவரை கோவிலும் உள்ளன. பெரிய மலைகளை குடைந்து அமைக்கப்பட்ட கோவில்களே குடவரைக்கோவில்கள் எனப்படும்.


இந்த மலை மொத்தம் 83 மீ உயரம் கொண்டது, மிகவும் பழமை வாய்ந்தது. ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளின் படி இந்த மலை 3.8 மில்லியன் வருடங்கள் பழமையானது என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இந்தியாவின் வடக்கே இருக்கும் இமாலய மலையைவிட அதிக பழமையானது. குவார்ட்ஸ், பெல்ஸ்பார் போன்ற அரிய வகை தாதுக்கள் இந்த மலையில் கிடைக்கின்றன. உலகத்திலேயே சுற்றுலா இடமாக கருதப்படும் மலைகளில் இதுவே மிக உயரமானதாகவும், பெரிதாகவும் கருதப்படுகிறது.


இந்த மலையின் உச்சியில் இருக்கும் உச்சிப் பிள்ளையாரைச் சந்திக்க மொத்தம் 437 படிகளைக் கடக்க வேண்டும். மூச்சிறைக்க ஏறிய பின் உச்சிப் பிள்ளையார் கோவிலில் இருந்து திருச்சியின் அழகையும், காவிரி ஆற்றையும் கண்டு களிக்கலாம். மிகப் பிரபலமான இந்தப் பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தி அன்று மிகப் பெரிய கொலுக்கட்டை படைக்கப்படுவதுண்டு. மேலும் இங்கு உள்ள மிகப் பெரிய தாயுமானசுவாமி கோவிலில் இருக்கும் கடவுளுக்கு மாத்ருபூதேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு இருக்கும் சிவலிங்கம், இந்த மலையினாலேயே ஆனது. இந்தக் கோவிலுக்கு கீழே அமைந்துள்ள இரண்டு பல்லவர் கால குடவரைக் கோவில்களில் 6ஆம் , 7ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன. மலை அடிவாரத்தில் குளமும் அமைந்துள்ளது.


17ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றும் மலை அடிவாரத்தில் காணப்படுகிறது. இப்போது அந்த அரண்மனை ராணி மங்கம்மாள் மஹால் என்று அழைக்கப்டுகிறது. இந்த அரண்மனை சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது. சில காலம் மதுரையை ஆண்ட நாயக்கர்களால் அரசவையாகவும் பயன்படுத்தப்பட்டது. இப்போது இந்த அரண்மனை அரசு அருங்காட்சியமாக செயல்படுகிறது.
மலை, கோட்டை, குளம், அரண்மனை, கோவில்கள் என இவை அனைத்தையும் ஒருங்கினைக்கும் வகையில் மேற்குப் பகுதியில் ஒரு பெரிய கதவு ஒன்றும் உள்ளது.


இந்தக் கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளைச் சந்தித்திருக்கிறது. இந்தக் கோட்டை நாயக்கர்கள், பிஜப்பூர், கர்னாடக மற்றும் மராட்டிய படைகளின் போரை கண்டு களித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயருக்கும் உதவியாக இருந்துள்ளது. இது போன்று நாயக்கர்கள் காலத்திலும், நவாப்கள் காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும் பல போர்களில் இந்தக் கோட்டையும் பங்கெடுத்துள்ளது.


இங்குள்ள கோவில்களில் சித்திரை மாதத்தில் பிரமோத்சவமும், ஆடிபூர விழாவும், பங்குனி மாதத்தில் தெப்பத் திருவிழாவும் வெகுசிறப்பாக நடைபெறும். நீங்களும் சென்று கண்டு மகிழுங்கள்..


அருங்காட்சியக நேரம்:
காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை.


திங்கட்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் செயல்படாது.


எப்படி செல்வது?


1) திருச்சிக்கு சென்னை, மதுரை, கோவை போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 


2) திருச்சியில் விமான நிலையமும், ரயில் நிலையமும் உள்ளது.




.
Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator