25.3.11

தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் - Devipattinam Navagraha Temple

தமிழகம் என்றாலே கோவில்கள்தான். மாநிலம் முழுவதும் ஏராளமான கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் வித்தியாசமானது. தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். இதில் என்ன வித்தியாசம் என்றால் இந்த நவக்கிரக கோவில் கடலில் உள்ளது. 




இந்துக்களின் நம்பிக்கையின் படி சூரியனை சுற்றும் ஒன்பது கோள்களும் , இவ்வுலகில் வாழும் மக்களின் விதியை தீர்மானிக்கின்றன. அந்த ஒன்பது கோள்களை வழிபட தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்கள் இருந்தாலும், இந்த நவக்கிரக கோவில் மிகப் பிரசித்தி பெற்றது.


வால்மீகி இராமயணத்தின் கதாநாயகனான ஸ்ரீராமபிரான் எழுப்பிய கோவிலாகும் இது. ராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, தேவிப்பட்டினத்தில் கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டார். ராமபிரான் வழிபட்டுக்கொண்டிருந்த சமயம் கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் அவர். பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன. இதனாலேயே இன்றுவரை இங்கு கடல் அலைகள் அதிகம் காணப்படுவதில்லை என்று கூறலாம். 


இந்த இடத்தில்தான் ராமர் சனிதோஷத்தில் இருந்து விடுபட்டார் என்ற வரலாறும் உண்டு. இந்த கோவிலின் அருகே கடற்கரையில் திலகேஸ்வரர் கோவிலும் உள்ளது. இங்கு சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளிக்கின்றனர். (சிவபெருமான் - திலகேஸ்வரர், பார்வதி தேவி - செளந்திரநாயகி.)






இந்தக் கோவிலுக்கு நவபாஷனக் கோவில் என்று ஓர் பெயரும் உள்ளது. (பாஷனம் - கல்). இங்கு நவதானியங்களை கொண்டு மக்கள் பூஜை செய்கின்றனர். அமாவாசை தினங்களில் ஏராளமானோர் குவிந்து அவர்களின் மூதாதையர்களையும் வழிபடுகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை நடத்துகின்றனர். 


இராமருக்கு சனி தோஷம் நீங்கியதால், இங்கு வழிபட்டால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். மேலும் இந்தக் கோவில் மூதாதையர்களை வழிபட மிகச்சிறந்த இடமாக கருதப்படுகிறது. சென்று வழிபடுங்களேன்!


எப்படி செல்வது?
தேவிப்பட்டினம் இராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், சிவகங்கையில் இருந்து 47 கி.மீ தொலைவிலும் உள்ளது.


1) தேவிப்பட்டினத்திற்கு உச்சிப்புளி, கல்லுக்கடை,இராமேஸ்வரம், இராமநாதபுரம் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.


2) அருகில் உள்ள இரயில் நிலையம் - இராமநாதபுரம் 15 கி.மீ தொலைவில்.


3) அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 98 கி.மீ தொலைவில். 

22.3.11

ஏற்காடு - Yercaud, Jewel of South India.

ஏற்காடு, சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இயற்கை அழகை ரசிக்க ஏற்ற இடம் ஏற்காடு.  கடல் மட்டத்தில் இருந்து 1515 மீ உயரத்தில் அமைந்துள்ளது. 


இன்றுவரை தமிழகமே அதிக வெப்பத்துடன் காணப்பட்டாலும் ஏற்காட்டின் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேலோ 13 டிகிரிக்கு கீழோ சென்றதில்லை என்பது ஏற்காட்டின் தனிச் சிறப்பு.


ஊட்டியை மலைகளின் அரசி என்றும், கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்றும் கூறுவது போல ஏற்காடு தென்னிந்தியாவின் விலையுயர்ந்த அணிகலன் என்று அழைக்கப்படுகிறது. இனி ஏற்காட்டில் காணவேண்டிய இடங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம். 


Yercaud Lake:
அடர்ந்த மரங்களும், தோட்டங்களும் சூழ படகுப் பயணம் செய்யவேண்டுமா? உங்களுக்காகவே காத்திருக்கிறது ஏற்காடு ஏரி. Emerald lake என்றும் அழைக்கப்படும் இந்த ஏற்காடு ஏரி, தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது. 




ஏரியின் அருகே அண்ணா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. மே மாதம் இங்கு மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.  


Lady's seat:
ஏற்காட்டில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் மலையில் இருந்து சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதையும் காணலாம்.  வானிலை சரியாக இருந்தால் , இங்கிருந்து மேட்டூர் அணையைக் கூட காணமுடியும் என்கிறார்கள்.






Killiyur Water falls:
ஏற்காடு ஏரியில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி.  மழை காலங்களில் தண்ணீர் அதிகம் இருக்கும் நேரத்தில் இங்கு செல்வது நல்லது.  




Pagoda point:
இங்கிருந்தும் சேலம் மாநகரை காணலாம், மேலும் இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும். இங்கு வாழ்ந்த மக்கள்  இங்கு கற்களால் ஒரு இராமர் கோவிலை கட்டியுள்ளனர்.  ஏற்காடு சென்றால் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. 




Bear's cave:
தனியாருக்குச் சொந்தமான இந்தக் குகை, கரடிகள் தங்கிய இடம்.  இந்தக் குகையில் சேர்வராயன் மலைக் கோவிலுக்கு பாதை உண்டு என்று நம்பப்படுகிறது ஆனால் உறுதியாக கூறமுடியாது. யாரேனும் உள்ளே சென்று பார்த்தால் தான் வழியைக் கண்டுபிடிக்க முடியும்.




Servarayan temple:
சேர்வராயன் மலையில் கடல் மட்டத்தில் இருந்து 5326 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். மே மாதம் இந்தக் கோவிலில் நடக்கும் திருவிழா மிகப் பிரபலம்.  இங்கு இருக்கும் கடவுளான சேர்வராயரும் காவேரி அம்மனும் சேர்வராயன் மலையையும், காவேரி நதியையும் குறிக்கின்றனர். இந்தக் கோவிலின் அருகே ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலும் உள்ளது.




National Orchidarium, Botanical Garden:
18.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் உள்ளன.  இந்தப் பூங்கா 1963ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 






ஏற்காடு செல்ல ஏற்ற நேரம் - ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரை.


விழாக்கள்: இங்கு மே மாதம் ஏழு நாட்கள் கோடைத் திருவிழா நடைபெறும். 


எப்படி செல்வது?
1) ஏற்காட்டிற்கு சேலத்தில் இருந்து அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)அருகில் உள்ள ரயில் நிலையம் - சேலம் 16 கி.மீ தொலைவில்.


3)அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 125 கி.மீ தொலைவில்.


.

பஞ்சபூத ஸ்தலங்கள் - Panchabootha sthalangal

சில நாள்களுக்கு முன்னர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும் நான்கு பஞ்சபூத கோயில்களைப் பற்றியும் எழுதினேன். மற்றொரு பஞ்சபூத கோயிலான காளஹஸ்தி ஆந்திர மாநிலத்தில் உள்ளது.  காளஹஸ்தியைப் பற்றி அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும். மேலும் தகவல்கள் பெற கீழ்கண்ட இணைப்புகளை பயன்படுத்தவும்.






காற்று - காளஹஸ்தி



.
Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator