25.3.11

தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் - Devipattinam Navagraha Temple

தமிழகம் என்றாலே கோவில்கள்தான். மாநிலம் முழுவதும் ஏராளமான கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அதில் தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் வித்தியாசமானது. தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில். இதில் என்ன வித்தியாசம் என்றால் இந்த நவக்கிரக கோவில் கடலில் உள்ளது. 




இந்துக்களின் நம்பிக்கையின் படி சூரியனை சுற்றும் ஒன்பது கோள்களும் , இவ்வுலகில் வாழும் மக்களின் விதியை தீர்மானிக்கின்றன. அந்த ஒன்பது கோள்களை வழிபட தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்கள் இருந்தாலும், இந்த நவக்கிரக கோவில் மிகப் பிரசித்தி பெற்றது.


வால்மீகி இராமயணத்தின் கதாநாயகனான ஸ்ரீராமபிரான் எழுப்பிய கோவிலாகும் இது. ராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, தேவிப்பட்டினத்தில் கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டார். ராமபிரான் வழிபட்டுக்கொண்டிருந்த சமயம் கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் அவர். பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன. இதனாலேயே இன்றுவரை இங்கு கடல் அலைகள் அதிகம் காணப்படுவதில்லை என்று கூறலாம். 


இந்த இடத்தில்தான் ராமர் சனிதோஷத்தில் இருந்து விடுபட்டார் என்ற வரலாறும் உண்டு. இந்த கோவிலின் அருகே கடற்கரையில் திலகேஸ்வரர் கோவிலும் உள்ளது. இங்கு சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளிக்கின்றனர். (சிவபெருமான் - திலகேஸ்வரர், பார்வதி தேவி - செளந்திரநாயகி.)






இந்தக் கோவிலுக்கு நவபாஷனக் கோவில் என்று ஓர் பெயரும் உள்ளது. (பாஷனம் - கல்). இங்கு நவதானியங்களை கொண்டு மக்கள் பூஜை செய்கின்றனர். அமாவாசை தினங்களில் ஏராளமானோர் குவிந்து அவர்களின் மூதாதையர்களையும் வழிபடுகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை நடத்துகின்றனர். 


இராமருக்கு சனி தோஷம் நீங்கியதால், இங்கு வழிபட்டால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். மேலும் இந்தக் கோவில் மூதாதையர்களை வழிபட மிகச்சிறந்த இடமாக கருதப்படுகிறது. சென்று வழிபடுங்களேன்!


எப்படி செல்வது?
தேவிப்பட்டினம் இராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், சிவகங்கையில் இருந்து 47 கி.மீ தொலைவிலும் உள்ளது.


1) தேவிப்பட்டினத்திற்கு உச்சிப்புளி, கல்லுக்கடை,இராமேஸ்வரம், இராமநாதபுரம் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.


2) அருகில் உள்ள இரயில் நிலையம் - இராமநாதபுரம் 15 கி.மீ தொலைவில்.


3) அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 98 கி.மீ தொலைவில். 

3 comments:

தங்க முகுந்தன் said...

நீங்கள் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் உங்களிடம் வினவியபொழுது பரீட்சை முடிந்ததும் பதிவிடுகிறேன் - என்ற சொல்லுக்கிணங்க இக்கட்டுரையை எனக்காகவே பதிவிட்டுள்ளீர்கள் போலத் தெரிகிறது. இம்முறை நான் சபரிமலைக்கு வராத காரணத்தால் எமது குழுவினரில் ஒருவர் இதுபற்றி விசாரித்த பொழுது இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யவே உங்களுடன் தொடர்பு கொண்டேன். பல ஆலயங்களை நாம் தரிசித்திருந்தாலும் இதுபற்றிய குறிப்புக்களை பதிவிட நாம் தவறி விட்டோம். இனி முதற்காரியமாக பதிவிடுதலை மேற்கொள்வது அவசியம் - நன்றி தங்களுடைய தன்னலமற்ற பணிகளுக்கு!

தமிழ் மகன் said...

@தங்க முகுந்தன்
கருத்துக்கு நன்றி.

அருண் காந்தி said...

Amazing article!I had been to this holy place,

and I Expect more from you like this...

Good Luck!

Post a Comment

நிறைகளும் குறைகளும் இங்கே!!

Related Posts with Thumbnails

தமிழக சுற்றுலா

↑ Grab this Headline Animator